வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமக்கு காணிக்கான உரிமையை தரக்கோரி இன்று (30.04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 7 வருடங்களாக தாம் வசித்து வரும் விக்ஸ் காட்டுப்பகுதிக்கு காணி உரிமை வழங்குமாறு கோரி அதிகாரிகளை சந்தித்த போது ஆவண செய்வதாக தெரிவித்தபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தாம் வாழ்வதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.
அதேவேளை தமது நிலைப்பாட்டை மீண்டும் அரச அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி பிரதேச செயலகத்திற்கு ஊர்வலமாக சென்று பின்னர் அங்கிருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாக சென்றிருந்தனர்.
அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சந்தித்து கலந்துரையாடினார்.
அதன் பின்னர் வவுனியா மாவட்ட செயலகத்தின் உள்ளே சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், அரச அதிபர் நலன்புரி நிலையங்கள் தொடர்பான மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுடனான கூட்டத்தில் இருந்தமையினால், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச.மோகநாதனிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








