ஜனாதிபதி யாழிற்கு திடீர் விஜயம் : வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என உறுதி!!(படங்கள்)

469

யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.

யாழ்.புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து உருவாகியிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை விசேட நீதிமன்றில் நிறுத்தி, குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இன்று முற்பகல் 10:15 மணியளவில் பழைய மாநகர சபை வளாகத்தில் ஜனாதிபதி வந்திறங்கினார். அவரை வடமாகாண ஆளுநர் பளிஹக்கார வரவேற்று ஆளுநர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கிருந்து ஜனாதிபதி குழுவினர் வேம்படி உயர்தரப் பாடசாலைக்கு சென்றடைந்தனர்.

அங்கு மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார். இதன்போதே அவர் இந்த உறுதியை வழங்கினார்.

இந்த விசேட கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2