பிரித்தானியாவில் பாதி இதயத்துடன் பிறந்த குழந்தை நீண்ட காலமாக உயிர் வாழ முடியாது என்பதால் குழந்தையை காப்பாற்ற பெற்றோர் போராடி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் Lancashire நகருக்கு அருகில் உள்ள பிரிஸ்டன் பகுதியில் டோன்னா போர்றேஸ்ட்(25) மற்றும் மைக்கல் கட்டம்(31) என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர்.
ஒரு வருடத்திற்கு முன் டோன்னா கர்ப்பம் தரித்தபோது அவரை மருத்துவர்கள் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது, குழந்தையின் தலை மற்றும் கழுத்து பகுதிகளை சுற்றி திரவங்கள் சூழ்ந்திருந்ததை கண்டு அது ஒரு Downs Syndrome என்ற நோயின் அறிகுறி என்றே மருத்துவர்கள் கருதினர்.
ஆனால், அதன் பிறகு மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் குழந்தையின் இதயம் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இருப்பினும், சில மாதங்களுக்கு பின்னர் Lilly-Anna Forrest என்ற அந்த குழந்தை ‘சராசரி இதயத்தின் அளவை விட பாதியான இதயத்துடன்’ பிறந்தது பெற்றோர்களை அதிர்ச்சியில் நிலைகுலைய வைத்தது.
குழந்தையின் உடல்நிலை பற்றி கூறிய மருத்துவர்கள், குழந்தை வளரும்போது அவருடைய இதயம் சராசரி மனிதர்களின் இதயம்போல் செயல்படாது. உடல் முழுவதும் ரத்தத்தை பாய்ச்சும் பணியையும் குழந்தையின் இதயம் செய்யாது என்றனர்.
இதைவிட, குழந்தையின் பலவீனமான இதயத்தால் அது இளமை பருவத்தை அடைவதற்குள் இறந்துவிட வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியது பெற்றோர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தையின் உடல்நிலை பற்றி பேசிய அவரது தாயார் டோன்னா, தன்னுடைய குழந்தையின் இருண்ட எதிர்காலம் தன்னை ஒவ்வொரு நிமிடமும் வாட்டி வதைக்கிறது.
தற்போது வரை குழந்தைக்கு 8 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
குழந்தை தூங்க செல்லும்போது, அது மறுநாள் கண் விழிக்குமா என்று தனது மனம் படும் துன்பம் மரணத்தை விட கொடுமையானது. ஆனாலும், எனது குழந்தையை மிகவும் பாசமாகவும் அன்போடும் வளர்த்து வருகிறேன்.
குழந்தைக்கு 3, 4 வயது ஆகும்போது நீண்ட தூரம் நடக்க முடியாது என்பதால் குழந்தையை சக்கரநாற்காலியில் தான் தள்ளி செல்ல வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனாலும், குழந்தைக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். என்னுடைய குழந்தை ஒரு நாள் பூரணமாக குணமாவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும், தற்போது குழந்தையை குணப்படுத்தும் வசதி தங்களுக்கு இல்லாததால், குழந்தையை காப்பாற்ற இணையதளம் மூலமாக நிதி திரட்டி வருவதாக குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.