ஆடைப்பெட்டியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்தப்பட்ட நிலையில் கடந்த மாதம் எல்லைக் காவல் அதிகாரிகளிடம் சிக்கிய 8 வயதுச் சிறுவன் தனது தாயாருடன் மீள இணைந்துள்ளான்.
ஐவரிகோஸ்ட்டைச் சேர்ந்த அடோயு குவாட்டரா என்ற சிறுவனே தனது தாயாரான லூஸி குவாட்டராவுடன் இணைந்துள்ளான். லூஸியும் அவரது கணவரும் ஸ்பெயின் தீவான கனேரியில் வாழ்ந்து வருகின்றனர்.
ஸ்பெயினுக்கு வந்து அங்கு 7 வருடங்களாக சட்டபூர்வமாக தங்கியிருந்த தனது கணவருடன் இணைந்து கொண்டிருந்த லூஸி, தனது இரு பிள்ளைகளை தம்மிடம் அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் அவரதும் அவரது கணவரதும் வருமானம் இரு பிள்ளைகளை வளர்ப்பதற்கு அதிகாரிகளால் மதிப்பிடப்பட்ட தொகையிலும் சிறிது குறைவாக இருந்ததால், அவர்களுக்கு அவர்களது மூத்த பிள்ளையான 11 வயது மகளை மட்டுமே வரவழைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமது மகனான அடோயுவை அழைத்துவர முடியாததால் சோகத்தில் வாடிய லூஸிக்கு ஆறுதலளிக்க வழிவகை தெரியாத அவரது கணவர், மொரோக்கோவைச் சேர்ந்த பெண்ணொருவ ருக்கு பெருமளவு பணத்தைச் செலு த்தி தமது மகனை சட்டவிரோதமாக ஸ்பெயினுக்கு கடத்தி வர ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் அந்த மொரோக்கோ பெண் அடோயுவை ஆடைப் பெட்டியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்தி வந்த போது எல்லைக் காவல் அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சட்ட விரோதமாக மகனை ஸ்பெயினுக்குள் அழைத்துவர முயற்சித்த குற்றச்சாட்டில் அடோயுவின் தந்தை கைதுசெய்யப்பட்டார்.
தற்போது ஒரு மாதம் கழித்து அடோயு தனது தாயாரான லூஸியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.இதன்போது மீளவும் இணைந்து கொண்ட தாயும் மகனும் ஒருவரையொருவர் கட்டியணைத்து கண்ணீர் சிந்தியமை அதிகாரிகள் உட்பட அனைவரையும் நெகிழ வைப்பதாக இருந்ததாக கூறப்படுகிறது.
அடோயுவின் தந்தையையும் விரைவில் பிணையில் விடுதலை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.