தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (10.07.2015) 2 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது.
வேட்பாளர்கள் பெருந்திளரான மக்கள் சகிதம் பேரணியாகச் சென்று சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தில் ஒன்றுகூடி ஆலய வழிபாடுகளை நிறைவு செய்த பின்னர் கண்டி வீதி வழியாக பேரணியாகச் சென்று வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
பின்னர் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இனப்பிரச்சனை தீர்வதற்கான வாய்ப்பினைப் பெறுதல், சிறையில் வாடுகின்ற எமது உறவுகளை விடுவித்தல், சொந்த இடங்களில் எமது மக்களை குடியேற்றி இராணுவத்தினரை வெளியேற்றுதல், எமது வயல் நிலங்கள், மற்றும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணையினை முன்னெடுத்தல், பெண் தலைமைத்துவங்களை கொண்டவர்களுக்கு வாழ்வாதாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்குமான தேர்தலாக இது அமையும்.
வருகின்ற அரசாங்கமானது ஒர் பெரும்பான்மை அரசாங்கத்தைக் கொண்டிராது எனவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வரும் அரசாங்கத்தை கொண்டு நடாத்துகின்ற சக்தியாக இருக்கும். அந்த வகையில் நான் சொன்ன விடயங்களை கருத்தில் கொண்டு வருகின்ற அரசாங்கத்துடன் இணைந்து தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே எமது நோக்கமாகும்.
வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் குறைந்தது ஜந்து ஆசனங்களை பெறுவதே கூட்டமைப்பின் நோக்கமாகும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் களமிறங்கவுள்ளது.
தமிழரசுக் கட்சி சார்பாக சார்ள்ஸ் இருதயநாதன், றோய்ஜெயக்குமார், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் சிவமோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ரெலோ சார்பாக வினோநோகராதலிங்கம், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமாள் பழனியாண்டி ஆகியோரும் களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புளொட் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் போட்டியிடுகின்றனர்.
-பிராந்திய செய்தியாளர்-






