வவுனியா பூந்தோட்டம் வீதியில் குடியிருப்பு சந்திக்கு அருகில் இன்று(19.07.2015) சற்றுமுன்னர் இரவு 9 மணியளவில் நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று இரவு 9 மணியளவில் பூந்தோட்டம் வீதியில் நடுவீதியில் காரை நிறுத்திவிட்டு சிலர் வாந்தி எடுத்துள்ளனர். அவ் வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் காரை வீதி ஓரமாக நிறுத்தி வாந்தி எடுக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.
சற்று நேரத்தில் மிகவும் வேகமாக வந்த கார் அவ் இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் இன்னும் ஒரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் வேண்டும் என்றே அவ் இளைஞர்கள் மீது மோதியதாகவும், காரில் இருந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். காரை ஓட்டிவந்தவர்கள் காரை விட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு கார்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-சிவச்செல்வன்-