
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பிரதேசத்தில் ஒரு தமிழன் அமைச்சராக வரவேண்டும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும் 2015 பாராளுமன்ற தேர்தலின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளருமான ப.உதயராசா நேற்று (19.07.2015) தனியார் உணவகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழர் வாழும் பிரதேசத்தில் கடந்த காலங்களில் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள், வேலைவாய்ப்பு, மீள்குடியேற்றம் போன்ற நிலையான பாரிய அபிவிருத்தித் திட்டங்களாக இருந்தாலும் சரி முஸ்லிம் பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் தமிழ் பிரதேசத்தில் மந்தகதியில் உள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
வன்னியைப் பெறுத்தவரைக்கும் தமிழர்கள் கடந்த இரண்டு நாடாளுமன்ற காலங்களில் தமிழர் பிரதிநிதிகளாலும், தமிழர்களின் வாக்குகளைப்பெற்று தெரிவாகிய ஆளுந்தரப்பு பிரதிநிதிகளாலும் பல விடங்களிலும் ஏமற்றப்பட்டதையே நாம் அவதானித்தோம்.
முப்பது வருடம் அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்தோம். முப்பது வருடம் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தோம். இப்போது இராஜதந்திரப் போரை முன்னெடுத்தே எமது உரிமையை வென்றெடுக்கவேண்டிய தேவை என்பதை தமிழர் தரப்பு கூறிக்கொண்டு அபிவிருத்திப் பக்கத்தை முற்றுமுழுதாக கைவிட்டநிலையில் வன்னியை பொறுத்தவரைக்கும் அபிவிருத்திக்கு பொறுப்பாகவிருந்த ஆளுந்தரப்பு அமைச்சர்கள் தமது சமுதாயத்திற்கு முன்னுரிமை கொடுத்தே செயற்பட்டிருந்தனர்.
எமக்கு உரிமை கிடைக்கும் வரைக்கும் நாங்கள் அமைச்சர் பதவியை பெறப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
ஆகவேதான் தமிழர்கள் எண்பது வீதத்திற்கு மேல் வாழ்கின்ற வன்னி பிரதேசத்திலிருந்து ஒரு தமிழன் அமைச்சராக வரவேண்டும். அதன்மூலம்தான் எமது பிரதேசத்தில் பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கலாம்.
நான் கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்டும் சொற்ப வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டும் எனது சொந்தப் பணத்தின் மூலம் பல வேலைத்திட்டகளை முன்னெடுத்ததுடன் உங்களோடு கூடவே இருந்திருக்கின்றேன்.
இம்முறை ஆளுந்தரப்பில் போட்டியிடும் எனக்கு ஆதரவு தாருங்கள் இப் பிரதேசத்தை தம்புல்ளையைப் போலவோ அல்லது கண்டியைப் போலவோ அல்ல கல்முனையைப் போலவோ நான் மாற்றிக் காட்டுகின்றேன் என்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும் 2015 பாராளுமன்றத் தேர்தலின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளருமான ப.உதயராசா குறிப்பிட்டிருந்தார்.
-புதுக்குளம் கனிசியஸ்-





