எமது 60 வருட போராட்டத்தில் அகிம்சை ஆயதம் என்ற போராட்டங்கைள சந்தித்து முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்குப் பின்னர் எமது மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு வரும் சூழலிலே நாம் இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்று வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பாக இன்று (24.07.2015) வவுனியா முதலாம் குறுக்குத்தெருவில் உள்ள வேட்பாளரின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பின் போது தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ்த் தேசியத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி இன்று அதனுடைய கொள்கையில் இருந்து விலக்கிச்செல்வதனால் இளம் தலைமைத்துவத்தை கொண்ட எமது கட்சி இத் தேர்தலை சந்திக்கின்றது.
இந் நிலையில் வடக்கில் தமிழ்த் தேசிய அரசியலில் இளைஞர்களையும் பெண்களையும் அதிகமாகக் கொண்ட கட்சியாக தமிழ்த் தேசிய முன்னணி விளங்குகின்றது.
இன்று இளைஞர்கள் அரசியலில் வர விரும்புகின்றார்கள். ஆனால் ஓய்வு பெற்றவர்களுக்கே இன்று சில கட்சிகள் சந்தர்ப்பத்தை வழங்கி வருகின்றது.
அதற்கும் அப்பால் போதைவஸ்துக்களுடன் தொடர்புடையவர்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படவேண்டும்.
குறிப்பாக கடந்த பாராளுமன்றத்தில் பல போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்கள் இருந்துள்ளார்கள். எனவே நல்லதொரு சமூகத்தை உருவாக்க பாராளுமன்றத்தில் சிறந்தவர்களும் நல்லவர்களும் இருத்தல் வேண்டும்.
இதேவேளை கடந்த கால தேர்தல்களிலும் பட்டதாரிகளைப் பயன்படுத்தி பட்டதாரிகளுக்கு வேலைதருவோம் எனத் தெரிவித்து அவர்கள் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டதன் பின்னர் கைவிடப்பட்ட நிலை காணப்பட்டது.
இந் நிலை தற்போதும் உருவாக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஒருவர் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்க தன்னால் முடியும் என்ற ஆசையைக் காட்டி தேர்தல் வேலைகளை செய்விக்கின்றார் என்று தெரிவித்தார்.
இத் தேர்தலில் தமிழ்த் தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் சிலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
-பிராந்திய செய்தியாளர்-









