கார் விபத்தொன்றில் நினைவாற்றல் பாதிக்கப்பட்டு தனக்குத் திருமணமாகியுள்ளதை மறந்த பெண்ணொருவர், தனது கணவரை மீண்டும் திருமணம் செய்த விசித்திர சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண வைபவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.வேர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் ஸடம்பர் (20 வயது) என்ற மேற்படி பெண் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தென்னஸி மாநிலத்திலுள்ள பிரிஸ்டல் நகரில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
அவருக்கும் அவரது காதலர் ஜெரமிக்கும் (21 வயது) திருமணமாகி 19 நாட்களில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. அந்த விபத்தால் நினைவாற்றல் பாதிக்கப்பட்ட ஜஸ்டிஸ் தனக்குத் திருமணம் நடந்ததையே மறந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது திருமணம் இடம்பெற்ற முதலாவது ஆண்டு தினத்தில் தனது கணவரை மீண்டும் திருமணம் செய்துள்ளார்.அவர்களது திருமணம் மரியன் எனும் இடத்திலுள்ள ஹங்றி மதர் பூங்காவில் இடம்பெற்றது. இந்த திருமண செலவிற்கான பணத்தை அவர்கள் பொதுமக்களின் நன்கொடைகள் மூலம் பெற்றிருந்தனர்.
ஜஸ்டிஸ் 10 வயது சிறுமியாக இருந்த போது பாடசாலையில் ஜெரமியை முதன் முதலாக . காலப் போக்கில் அவர்களிடையே காதல் மலர்ந்தது.இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெரமி திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை ஜஸ்டிஸிடம் வெளியிட்டார்.தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் முதலாம் திகதி அவர்கள் முதல் தடவையாக திருமண பந்தத்தில் இணைந்தனர்.