கொழும்பு பிரதேசத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களில் நவீன முறையில் அட்டை முறைமையினை பயன்படுத்தி வாகனங்களை தரித்தல் அதற்கான கட்டணங்களை செலுத்தும் நடைமுறையினை கொழும்பு மாநகர சபை அமுல்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று குறித்த வாகனத் தரிப்பிடங்களில் வாகன உரிமையாளர்கள் தன்னிச்சையாகவே இந்த அட்டைகளை பயன்படுத்தி வாகனங்களை தரித்துக் கொள்ள முடியும். அதன்பின் குறித்த அட்டைகளை காண்பித்து தன்னிச்சையாகவே வெளியேறக் கூடியதாக இருக்கும்.
கொழும்பு மேயர் ஏ.ேஜ.எம். முஸம்மில் நேற்று நடத்திய ஊடக மாநாடொன்றில் இத்திட்டம் சம்பந்தமாக விளக்கிக் கூறினார். முதற்கட்டமாக கலதாரி ஹோட்டலில் இருந்து வெள்ளவத்தை வரையிலான பாதைகள், மற்றும் டுப்ளிக்கேஷன் வீதிவரை இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இதற்காக சுவிட்ஸர்லாந்து நாட்டில் இருந்து 1.5 மில்லியன் யூரோ நிதியுதவி பெறப்பட்டுள்ளது. இதற்காக ரீங்கா கார் பார்க் தனியார் நிறுவனமும் கொழும்பு மாநகர சபையும் எதிர்வரும் 8 வருடத்திற்காக ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டன. 850 கார் தரிப்பிடங்களில் சுமார் 5000 கார்கள் தரிக்கும் இடங்கள் இந்தக் கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளன. இக்கம்பனியின் வருமானத்தில் ஒரு மாதத்திற்கு 3.4 மில்லியன் ரூபாவை மாநகர சபைக்குச் செலுத்தல் வேண்டும். அத்துடன் விளம்பரம் மற்றும் இதர இலாபத்திலும் 40 வீதத்தை மாநகர சபைக்கு செலுத்தல் வேண்டும். இதற்காக 140 இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இக்கம்பனியினால் தருவிக்கப்பட்டுள்ளன.