இலங்கைக்கு மேலும் உதவி வழங்க பிரித்தானியா தயார்!!

395

David+Cameron+Maithripala+Sirisena+Visits+-3kXVlkM_kolஇலங்கையில் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கடந்த 10 மாதங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, பிரித்தானியப் பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டுக்காக மால்டா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமருனுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (27) இடம்பெற்றுள்ளது.

இதன்போதே டேவிட் கெமருன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிரித்தானியா இது தொடர்பில் இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்கவும் தயாராகவுள்ளதாக கெமருன் கூறியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தல், நல்லிணக்கம், அரசியலமைப்புத் திருத்தங்கள், புதிய அரசியலமைப்புக்கான பரிந்துரை போன்றன தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் இந்த சந்திப்பில் பிரித்தானியப் பிரதமரிடம் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் இலாபங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என டேவிட் கெமருன் இதன்போது கூறியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் நேற்றையதினம் (28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மால்டாவில் வைத்து கனடா மற்றும் அவுஸ்திரேலியப் பிரதமர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களுடனுமான தனித் தனி சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால, பல்வேறு இனச் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

மேலும் கடந்த 30 வருடகால யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி எடுத்துக் கூறியுள்ளார்.

அத்துடன் நாட்டை விட்டு வௌியேறி கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களை மீளத் தாயகம் திரும்ப வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.