தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப்பகிர்வும் எனும் வாசிப்புத் தொடர்பான இம்மாதத்திற்கான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (05.12.2015) மாலை 3 மணியளவில் வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் சிறப்புற ஆரம்பமாகியது.
இந் நிகழ்வில், வாசிப்பில் ஆர்வமுள்ள பல தரப்பட்ட வயதுள்ள பலர் ஆர்வத்துடன் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பாமாகிய இந் நிகழ்வை, நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர் கு.சிரஞ்சீதன் தொகுத்து வழங்கினார்.
தமிழ் மாமன்றம் மற்றும் வாசிப்பும் அனுபவப் பகிர்வும் தொடர்பான விளக்கத்தினை, தமிழ் மாமன்றத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவரான செல்வி. ஜெசிதா ஆனந்தமூர்த்தி அவர்கள் வழங்கினார்.
வாசிப்பும் அனுபவப்பகிர்வும் நிகழ்வானது மாதம் இரு முறை, ஒரு நிகழ்வில் இரு படைப்புக்கள் வீதம் பகிரப்பட்டு கலந்துரையாடப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, பிரதம நூலகர் அவர்களின் கருத்துரையினைத் தொடர்நது முதலாவது பகிர்வு பகிரப்பட்டது.
முதலாவது படைப்பாக தகழி சிவசங்கரப்பிள்ளையால் எழுதப்பட்டு, சுந்தரராமசாமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ‘செம்மீன்’ நாவலும், அதன் கதையை மூலமாகக் கொண்டு ராமு கார்யாட்டு இயக்கிய மலையாள திரைப்படம் பற்றிய பகிர்வை தமிழ் மாமன்றத்தின் தலைவர் சி.கிருபானந்தகுமாரன் அவர்கள் பகிர்ந்தார்.
தகழி சிவரங்கப்பரப்பிள்ளை மலையாள எழுத்துலகில், முக்கியமான ஒருவர் ஆவார். செம்மீன் எனும் நாவல், சாகித்திய விருது பெற்ற ஓர் நாவல் ஆகும். விழிம்பு நிலை மக்களிள் வாழ் நிலையை படம் பிடித்துக் காட்டுகின்ற இந் நாவலின் கதை மலையாளத்தில் திரைப்படமாக்கப்பட்டது.
மீனவ வாழ்க்கையினுடைய எழுச்சி வீழ்ச்சி, கருத்தம்மா என்ற மீனவப் பெண்ணினுடைய வாழ்க்கை, காதல் போன்றவற்றை மையப்படுத்தியதாக இந் நாவலும் திரைப்படமும் அமைந்நதாக விளக்கமளிக்கப்பட்டது.
ஒரு நாவலை முழுமையாக படித்த உணர்வை இப் பகிர்வு ஏற்படுத்தியத்தாக, பகிர்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
பகிர்வில் கலந்து கொண்ட ஒருவர், அத் திரைப்படமானது காதலை மையப்படுத்திய திரைப்படம் என்ற ரீதியிலும், அப் படத்தில் நடித்த நடிகைகளின் நடிப்பாற்றல் பற்றியும் கருத்து தெரிவித்தார்.
இரண்டாவது படைப்பாக கவிக்கோ அப்துல் ரகுமானின் ‘சுட்டுவிரல்’ கவிதைத் தொகுதி ச.கஜன் அவர்களால் பகிரப்பட்டது. கவிதை உலகில், கடந்து செல்ல முடியாத கவித்துவம் மிக்க கவிஞர் கவிக்கோ ஆவார். அவரின் சமுகத்தின் மீதான கோபத்தை வெளிப்படுத்தும் முகமாக ஏறத்ததாழ 25 வருடங்களுக்கு முன்பு படைக்கப்பட்ட இக் கவிதைகள் இன்றைய காலத்திற்கும் ஒத்து வருவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடவுளில் ஆரம்பித்து குழந்தை வரை பாரபட்சமின்றி தன் சுட்டுவிரலை கவிக்கோ நீட்டி இருப்பதை குறித்து காட்டி, முக்கியமான சில கவிதைகள் நயக்கபட்டு விளக்கமளிக்கப்பட்டமையையும் குறிப்பிடத்தக்கது.
கவிதைகளின் இறுதி வரிகளின் ஆழமான வெளிப்பாட்டு தன்மை, நகைச்சுவை உணர்வு மிக்க வரிகள் மூலம் ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்தல் என்ற ரீதியில், அக் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கருத்துரையில், பகிர்வில் கலந்து கொண்ட செ.மதுரகன் அவர்கள், கவிக்கோவின் கவிச் சிறப்புக்கள் பற்றியும், கவிக்கோவின் கவிதைத் தொகுதியிலுள்ள ஒரு சில கவிதைகளையும் எடுத்துக்காட்டினார்.
நாவல், கவிதை என்ற இரு படைப்புக்கள் பற்றிய, ஆராக்கியமான ஓர் கலந்துரையாடலாக இக் கலந்துரையால் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம் மாதத்திற்கான அடுத்த நிகழ்வு, எதிர்வரும் 19.12.2015 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறும் என்றும், பகிரப்படவிருக்கும் படைப்புக்கள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் மாமன்றத்தின், வாசிப்பு தொடர்பான இந் நிகழ்வில், எழுத்தாளர்களையும் அழைத்து, அவர்களில் படைப்புக்கள் தொடர்பான விடயங்களையும் பகிர்வதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.






