வவுனியா நகரசபைக்கு சொந்தமான பொதுப் பூங்காவை புனரமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் வவுனியா நகரசபை செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகரசபையின் செயலாளரை சந்தித்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் பலர் எழுத்து மூலமாக இந்த கோரிக்கையை விடுத்ததுடன், பூங்கா நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் நுளம்பு பெருக்கம் மிகுந்த இடமாகவும் மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்புடையதற்றதாகவும் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை இப்பூங்காவிற்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டபோதிலும் பூங்கா திருத்தம் செய்யப்படாமல் உள்ளமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டிய பொது அமைப்புகள் அந்நிதியை பெற்று புனரமைப்பு செய்து நகர அபிவிருத்திக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






