வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களுக்கான காணிகள் கையளிக்கப்பட்டது : விரைவில் மீள்குடியேற்றம்!!

733

Chithamparapuram Camp

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்களை மீள்குடியேற்றுவதற்கான காணிகள் திங்கள் கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் வடமாகாண புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சின் நடவடிக்கை காரணமாக வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்திலுள்ள 191 குடும்பங்களுக்கான காணிகள் அப்பகுதியிலேயே வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

1993 ஆம் ஆண்டிலிருந்து அகதிகளாக வாழ்ந்துவரும் இவர்களுக்கு தலா 6 பேர்ச் வீதம் காணிகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

அளவீடு செய்யப்பட்ட காணிகள் ஒவ்வொன்றும் வடமாகாண சுகாதார, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இக் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வடமாகாண மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களுக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு வடக்கு மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் நிதி உதவி வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.