
கனடாவில் தமிழகத்தை சேர்ந்த பெண் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்துள்ள வள்ளியம்மை வான்கூவர் நகரில் குடியேறியுள்ளார்.வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992-ம் ஆண்டு சட்டக்கல்வியை முடித்த அவர், 1995-ம் ஆண்டு முதல் வழக்கறிஞர் பணியை தொடங்கியுள்ளார்.
மேலும், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், சைமன் பிரேசர் பல்கலைக்கழகம், வான்கூவர் கம்யூனிட்டி கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் சட்டக்கல்வியை பயிற்றுவித்துள்ளார்.தேசிய கெனடியன் பார் அசோசியேசன் மற்றும் அதனுடைய பிரிட்டிஷ் கொலம்பியா கிளையின் பல்வேறு செயற்குழுக்களில் வள்ளியம்மை பணியாற்றி உள்ளார்.
இந்தியா-கனடா வியாபார அமைப்பின் தலைவராகவும், தேசிய அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றி இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்பட செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





