வவுனியாவில் மீள்குடியேற்றக் கிராமங்களான நொச்சிமோட்டை, புதிய சின்னக்குளம், துவரங்குளம் ஆகிய மூன்று கிராமங்களிலும் 300 இற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்.
மூன்று கிராம மக்களும் பயணிக்கும் பிரதான வீதியின் குறுக்காக நொச்சிமோட்டைக் குளத்தின் வான் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் வீதியின் குறுக்காக வான் பாய்வதால் 3 கிராமத்தைச் சேர்ந்த மக்களும் இவ் வீதியின் ஊடாக பயணிப்பதில் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.
மழைக் காலங்களில் இடுப்புப் பகுதி வரை வான் பாய்வதால் பாடசாலை மாணவர்கள் பாடசாலை செல்லமுடியாத நிலை ஏற்படுவதாக தெரிவிக்கும் இப் பகுதி மக்கள், தண்ணீர் அதிகமாகப் பாய்வதால் இவ் வீதியைக் கடந்துவரும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட தமது வாகனங்களுக்குள் தண்ணீர் புகுவதால் தமது வாகனங்களும் பழுதடைவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் நீர் வடிந்து ஓடக்கூடிய சீரான வடிகாலமைப்பு அமைப்பு இல்லாத காரணத்தால் கிராமத்தின் வீதிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து தமது போக்குவரத்து முற்றாக பாதிக்கப்படுவதாகவும் உரிய அதிகாரிகள் இவ் விடயத்தில் கவனமெடுத்து தேங்கி நிற்கும் நீர் வடிந்து செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இம் மூன்று கிராம மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.









