சமுக சேவைத் திணைக்களத்தினால் வழங்கப்படும் பொதுசன உதவி மாதாந்த உதவிப்பணம் குறித்த திகதியில் வழங்கப்படாததால் முதியோர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதியோர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு சரியான முறையில் வழங்கப்படாமையால் முதியோர்கள் தினசரி தபால் நிலையம் சென்று காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. முதுமைப் பருவத்திலும் தினசரி இவ்வாறு தபால் நிலையம் சென்று ஏமாற்றத்துடன் தங்களது வாழ்வை கொண்டு செல்கின்றனர் இம் முதியவர்கள்.
இவ் விடயம் தொடர்பாக முதியவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், எனக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 2000 ரூபா தருகின்றனர். ஆனால் சரியான திகதியில் எமக்கு கிடைப்பதில்லை. 15ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை வழங்கப்படும் என தபால் நிலையத்தில் பதாகை காணப்படுகின்றது.
ஆனால் நான் 18ம் திகதி வந்தால்கூட மாதாந்தக் கொடுப்பனவு கிடைப்பதில்லை. என்னால் இவ்வாறு நடந்து செல்ல கூட முடியவில்லை என மன வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் இப் பணத்திற்காக தாம் பலதடவை அலைந்து திரிவதாக கவலை தெரிவித்ததுடன், உரிய அதிகாரிகள் இவ் விடயத்தில் கவனமெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.






