வீட்டை இடிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்: ”அலேக்கா” தூக்கி வேறு இடத்துக்கு மாற்றும் உரிமையாளர்!!

497

house_change_002

நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டிய வீட்டை அரசாங்கம் இடிக்க உத்தரவிட்டதால் அதனை பெயர்த்து வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியில் வீட்டு உரிமையாளர் ஈடுபட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே இசுக்கழிக்காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன்(57).

டீ விற்பனை வியாபாரம் செய்துவரும் இவருக்கு, அதே கிராமத்தில் உள்ள வெள்ளங்குட்டை குளம் அருகே விவசாய நிலம் உள்ளது.அப்பகுதியில் அவர் ரூ.35 லட்சம் மதிப்பில் வீடு கட்டி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறார்.இந்நிலையில், குளத்துக்கு தண்ணீர் செல்லும் ஓடையில் வீடு கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த வீட்டை இடிக்குமாறு உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கிலும் வீட்டை இடிக்க உத்தரவிடப்பட்டது. வீட்டை இடிக்க மனமில்லாத வெற்றிச்செல்வன் அதனை நகர்த்த முடிவு செய்துள்ளார்.இதையடுத்து ‘எல் அண்ட் டி’ நிறுவனம் உதவியுடன் வீட்டை நகர்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, கூறும்போது, என்னுடைய முதல் பிள்ளையாக வீட்டை கருதுகிறேன்.

அதனால், ஒரு செங்கல்லைக் கூட எடுக்க மனம் இல்லை. இதையடுத்து, எங்களது விவசாய நிலத்துக்கு வீட்டை நகர்த்துவது என்று முடிவு செய்தேன்.வீடு அமைந்துள்ள இடம் மற்றும் புதிதாக கொண்டு செல்லவுள்ள இடத்தின் மொத்த தூரம் 59 அடியாகும்.

எல் அண்ட் டி நிறுவனம் மூலம் வீட்டை நகர்த்தும் பணியை மேற்கொண்டுள்ளேன். 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வீட்டின் தரைக்கு அடியில் கற்களை பெயர்த்து 400 ‘ஹைட்ராலிக் ஜாக்கிகள்’ பொறுத்தப்பட்டுள்ளன.47 நாட்கள் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 20 முதல் 25 நாட்களில் பணிகள் முழுமை பெற்றுவிடும் என்று நம்புகிறேன்.இதற்காக ரூ.25 லட்சம் செலவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.