வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் வளர்ப்பு யானைகள் தென்பகுதியில் இருந்து கொண்டு வந்து இறக்கப்படுவதாகவும் இதன்காரணமாக கடந்த 19ம் திகதி வே.தர்மலிங்கம் என்பவர் யானையின் தாக்குதலால் கொல்லப்பட்டதாகவும் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் யானைகளின் அட்டகாசம் தொடர்பாக பல தடவைகள் வன இலாகாவினருக்கும் அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் தெரிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
இந் நிலையில் யானையின் தாக்குதலால் மரணமான தர்மலிங்கத்தின் வீட்டின் முன்பாக இருந்து பேரணியாக சென்ற பொதுமக்கள் எமது உழைப்பு யானைகளுக்கு தீவனமா, மிருகவதைக்கு தடைபோடும் நாட்டில் மிருங்களால் மனிதவதை எதற்கு, மனித உயிருக்கு விலை இல்லை மிருக உயிருக்கு விலை ஏது, அரசே பிரதேச மக்களுக்கு பாதுகாப்பு வழங்கு, அதிகாரிகளின் அசண்டையீனம் இனியும் வேண்டாம், இறக்காதே இறக்காதே யானைகளை இறக்காதே என்ற பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களையும் எழுப்பியாவாறும் செட்டிகுளம் பிரதேச செயலகம் வரை சென்றிருந்தனர்.
பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் செட்டிகுளம் பிரதேச செயலாளரூடாக அரசாங்க அதிபருக்கு வழங்குவதற்கு என மகஜரொன்றினையும் செட்டிகுளம் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் சி.சண்முகானந்தனிடம் கையளித்ததுடன் செட்டிகுளம் பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும் மகஜரை கையளித்திருந்தனர்.






