
வவுனியா மகாறம்பைக்குளம் 215A கிராமசேவையாளரின் அலுவலகம் இன்று (23.02.2016) மாலை இனந்தெரியாதவர்களின் தாக்குதலில் முற்றாக சேதமடைந்துள்ளது.
கிராமசேவையாளரும் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளரும் வழமைபோன்று தமது பணிகளை நிறைவு செய்த பின்னர் தமது அலுவலகத்தினை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.
இருவரும் சென்ற குறுகிய நேரத்திற்குள் உட்புகுந்த இனந்தெரியாதவர்கள் போத்தல், கற்களைக் கொண்டு அலுவலகத்தின் கண்ணாடி அனைத்தையும் உடைத்து சேதப்படுத்தியதுடன் பிரதான கதவினையும் உடைத்து உட்புகுந்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தினை கிராமசேவையாளர் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா அவர்களுக்குத் தெரிவித்ததையடுத்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.புஸ்பகுமார அவர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





