
காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட தர்மபுரி காதல் ஜோடி இளவரசன் – திவ்யா. மகளின் காதல் திருமணத்தால் மனம் உடைந்த திவ்யாவின் தந்தை செல்வராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து திவ்யாவை மீட்டு தரும்படி அவரது தாய் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றில் கேபியஸ் கார்பஸ் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றில் ஆஜரான திவ்யா தாயுடன் செல்வதாகவும், இளவரசனுடன் செல்ல விரும்பவில்லை என்றும் கூறினார். திவ்யா பிரிந்து சென்ற நிலையில் மறுநாள் தர்மபுரியில் ரெயில்வே தண்டவாளத்தில் இளவரசன் பிணமாக கிடந்தார்.
இளவரசன் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள். இதுபற்றி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலை வைத்தியர்கள் இளவரசன் உடலை மறு பரிசோதனை செய்து அவர் தற்கொலை செய்ததை உறுதிப்படுத்தினார்கள். இளவரசன் தற்கொலை செய்ததை உறுதிப்படுத்தும் அனைத்து ஆவணங்களையும் பொலிஸார் சேகரித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரி அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் அரூர் பொலிஸ் டி.எஸ்.பி. சம்பத் தலைமையிலான தனிப்படை பொலிஸார் இதுதொடர்பாக விசாணை நடத்தி ஆவணங்களை சேகரித்து வருகிறார்கள். திவ்யாவிடம் பொலிஸார் விசாரித்தபோது இளவரசன் தற்கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு மன்பு என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, நீ என்னோடு வாழ வராவிட்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன். தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே உயர் நீதிமன்ற விசாரணையின்போது சென்னையில் லொட்ஜில் தங்கியிருந்தபோது தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறினார் என்றார்.
திவ்யாவும் இளவரசனும் பேசிய பேச்சுக்களை மொபைல் போன் நிறுவன உதவியுடன் பொலிஸார் பதிவு செய்து வைத்துள்ளனர். அதையும் திவ்யாவிடம் பொலிஸார் போட்டு காட்டி இது நீங்கள் இருவரும் பேசியதுதானா என்று கேட்டனர்.
அந்த உரையாடலை கேட்ட திவ்யா இது நாங்கள் பேசியதுதான் என்று உறுதிப்படுத்தினார். இளவரசன் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்ததையும் பொலிஸார் கைப்பற்றி வைத்து இருக்கிறார்கள். ஏற்கனவே இளவரசன் எழுதிய காதல் கடிதங்களை வைத்து இந்த கடிதத்தில் இருப்பது இளவரசனின் கையெழுத்துதானா என்று திவ்யாவிடம் கேட்டனர்.
அதை பார்த்த திவ்யா இது இளவரசனின் கையெழுத்துதான் என்று உறுதிப்படுத்தினார். ஏற்கனவே தடயவியல் துறை மூலம் கடிதத்தில் இருக்கும் கையெழுத்து மற்றும் தொலைபேசி உரையாடல்கள் இளவரனுடையது தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது திவ்யாவும் பொலிஸில் அதை உறுதிப்படுத்தியிருப்பது பொலிஸ் விசாரணையில் மிகவும் முக்கியமான சாட்சியாக கருதப்படுகிறது.
திவ்யாவின் தாய் தேன்மொழியும் இளவரசன் தற்கொலை செய்வதற்கு முன்பு தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கெண்டு தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறியதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.





