சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் அகதிகள் நடமாட தடை

600

swissசுவிட்சர்லாந்திலுள்ள நகர் ஒன்றில் கிறிஸ்தவ ஆலயங்கள், சந்தை, நீச்சல் குளம் உள்ளிட்ட பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏராளமான இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு பல்வேறு இடங்களிலும் அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்து நாட்டின் மேற்கு சூரிச் நகரின் அருகே அமைந்துள்ள பெர்ம்கார்ட்டன் நகரத்திலேயே அகதிகள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்த மாதம் சுவிட்சர்லாந்தில் புதிதாக தஞ்சம் அடையும் அகதிகளுக்கான முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நகரின் நிர்வாகம் சமீபத்தில் பரபரப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில் அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்கள் கோயில், கிறிஸ்தவ ஆலயங்கள், நூலகம், நீச்சல் குளம், பள்ளி மைதானம் உள்ளிட்ட 32 பொது இடங்களில் நடமாட கூடாது என்று அறிவித்துள்ளது.

இது குறித்து நகர மேயர் ரேமான் டெல்லன்பாக் வானொலிக்கு அளித்த பேட்டியில், பொது இடங்களில் அகதிகள் நடமாடும் போது அவர்கள் மீது இன ரீதியான தாக்குதல் நடக்கவும் போதைப் பொருள் பழக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அவர்களுக்கு எல்லா இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது இயலாது. எனவேதான் அகதிகள் பொது இடங்களில் நடமாட வேண்டாம் என்று தடை விதித்துள்ளோம் என்றார்.

எனினும் பெர்ம்கார்ட்டன் நகர நிர்வாகத்தின் தடை உத்தரவுக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இன ரீதியான பாரபட்சம் நிறைந்த நடவடிக்கை என்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.