யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இன்று (23.05.2016) மாலை 3.30 மணியளவில் ஊடகவியாளர் சந்திப்பு நடைபெற்றது. இவ் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வவுனியா வளாக முதல்வர் த.மங்களேஸ்வரன்..
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் எதிர்வரும் மே 27ம் மற்றும் 28ம் திகதிகளில் மாபெரும் தொழிற்சந்தை ஒன்றை பம்பைமடுவிலுள்ள வவுனியா வளாகத்தில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி, தொழில்சார் கற்கை, தொழில் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன.
இந்நிறுவனங்கள் தமக்குத் தேவையான தொழில் வல்லுனர்களை பல்வேறு துறைகளில் நேரடியாக தெரிவு செய்து வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளன. இவ் வேலை வாய்ப்புக்கள் பல்வேறு தகமையுடையவர்களுக்கும் ஏற்ற வகையில் இருக்கும்.
இந்நிகழ்வானது 27 ம் திகதி அனைத்து பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்காகவும் 28ம் திகதி அனைத்து வேலை தேடுபவர்களுக்காகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள் இரண்டு நாட்களும் இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகள் இரு நாட்களும் காலை 9 மணி முதல் மலை 4 மணிவரை இடம் பெறும் எனத் தெரிவித்தார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி த.மங்களேஸ்வரன்(முதல்வர், வவுனியா வளாகம்), கலாநிதி அ.புஷ்பநாதன்( பீடாதிபதி, வியாபாரக் கற்கைகள் பீடம்), திரு.சி.குகனேசன் (பீடாதிபதி, பிரயோக விஞ்ஞான பீடம்), கலாநிதி இ.நகுலன்(சிரேஷ்ட விரிவுரையாளர்), இ.ஜெயக்குமார் (சிரேஷ்ட உதவிப்பதிவாளர், பரீட்சைகள் கிளை, வவுனியா வளாகம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் மாபெரும் தொழிற்சந்தை!!










