பீரிஸின் கருத்துக்களுக்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு..!

541

glஇலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விரோத மனப்பான்மையுடன் பேசுவதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை நேரில் அழைக்க புதுடில்லி சென்றிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை அடுத்த தமிழக மீனவர்களின் இந்தக் கருத்து வந்துள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகு டில்லியிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை மீனவர்களிடையே உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், அமைச்சரின் கருத்துக்கள் ஒரு நல்லுறவோடு பேசுவதுபோல தங்களுக்கு தெரியவில்லை என்று தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலர் போஸ் தெரிவித்தார்.

அவரது கருத்துக்கள் தமிழக மீனவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது எனவும் அவர் கூறுகிறார்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகளுக்கு மாறக பேராசிரியர் பீரிஸின் கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கை, தமக்கிடையே மேற்கொண்டு ஒரு பெரிய விரோதத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் போஸ் தெரிவித்தார்.

(BBC)