அதிகாலையில் எழுவதில் இவ்வளவு நன்மைகளா?

375

Early Morning

அதிகாலையில் எழும்படி நம் வீடுகளில் பெரியவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பலருக்கு அதுதான் உலக மகா கஷ்டமான காரியம். சரி, அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா?

அதிகாலையில் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.

காலையில் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் நெருங்காது. அதிகாலையில் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலம் பயக்கும்.

அதிகாலையில் எழுவதால் மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன, அவற்றில் எவற்றை, எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என எளிதாகத் திட்டமிட முடியும்.

உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்ய முடியும். அதிகாலை எழுவதால், காலை வேளையில் கபகபவென்று பசி எடுக்கும். காலை ஆகாரத்தை தவறவிடாமல் இருப்பதால், உடல் பருமன், சர்க்கரைநோய் அபாயம் குறையும்.

இரவு 9 மணிக்கெல்லாம் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூங்குவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.

அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் இயற்கைக் கடனைக்கழிக்க முடியும். அது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும்.

உடல்நலனுக்கு மட்டுமல்ல, மனநலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது. எனவே, அதிகாலையில் எழும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமாக்கிக் கொள்வோம்.