மெட்ராஸ் கபே படத்தில் பிரபாகரனாக நடித்த அஜய் ரத்னத்துக்கு எதிர்ப்பு!!

315

ajay ratnam

ஜோன்ஆபிரகாம் நடித்த மெட்ராஸ் கபே படம் இந்தி, தமிழ் மொழியில் வருகிற 23ம் திகதி ரிலீசாகிறது. விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக இப்படத்தில் சித்தரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இதில் ஜோன் ஆபிரகாம் இந்திய “ரோ” அதிகாரியாக வருகிறார். கதாநாயகி நர்கிஸ் பக்ரி இங்கிலாந்து பத்திரிகை நிருபராக வருகிறார். அஜய் ரத்னம் பிரபாகரன் கரக்டரில் நடித்துள்ளார். பியூஷ் பாண்டே இந்திய அமைச்சரவை செயலாளராக வருகிறார். லீனா மரியா, டினு ஆகியோர் தமிழ் அகதிகளாக வருகின்றனர்.

இலங்கையில் அஜய் ரத்னம் விடுதலைப் புலிகளுக்கு யுத்த வியூகம் அமைத்து கொடுப்பது போன்றும் அவரை பிடிக்க ஜோன் ஆபிரகாம் துப்பறிவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட பிரபாகரன் வேடத்தில் அஜய்ரத்னம் நடித்ததற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

அக்கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் பிரபாகரன் விடுதலை போராட்ட வீரன். தமிழர்களின் அடையாளம். அப்பாவி சிங்களர்களை பிரபாகரன் கொன்றது இல்லை. பிரபாகரனை தீவிரவாதியாக்கி மெட்ராஸ் கபே படத்தை எடுத்துள்ளனர். இந்த படத்தில் பிரபாகரன் வேடத்தில் அஜய்ரத்னம் நடிக்க ஒப்புக்கொண்டது கண்டிக்கத்தக்கது.

இதில் நடிக்க மாட்டேன் என்ற அவர் மறுத்து இருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. அஜய்ரத்னம் படங்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இயக்குனர்கள் புதுப்படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டு உள்ளார்.