மூலிகைகளை சாறாக்கி குகை ஓவியங்களைத் தீட்டினான் ஆதி மனிதன். உடலில் ஓவியங்களை பச்சை குத்திக் கொண்டான் நவீன மனிதன். ஒட்டுமொத்த உடலையே ஓவியக்கூடமாக்கிவிட்டான் டிஜிட்டல் மனிதன்.
இந்த வகையான ஓவியத்திற்கு செங்கம்பளம் விரித்திருக்கிறது ஒஸ்திரியாவில் நடைபெற்றுவரும் உலக உடல் ஓவியத் திருவிழா!
கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் ஜூலை முதல் வாரத்தில் ஒஸ்திரியாவில் ‘உலக உடல் ஓவியத் திருவிழா’ நடைபெற்றுவருகிறது.
இந்த ஆண்டிற்கான திருவிழா ஜூலை 1 முதல் 3 வரை கர்ந்தியாவில் நடைபெற்றது. இந்தத் திருவிழா விதவிதமாகக் கலைகளை நேசிக்கும் ஓவியப் பிரியர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் மேக்கப் பொருட்களுடன் ஓவியப் பிரியர்கள் ஒஸ்திரியாவில் ஆஜராகிவிடுவார்கள்.
இந்த ஆண்டு கொஞ்சம் கூடுதலாக இந்தியா உட்பட 50 நாடுகளிலிருந்து ஓவியர்கள், ஓவியப் பிரியர்கள் ஒஸ்திரியாவில் குவிந்திருந்தார்கள்.
தூரிகை, காற்றுத் தூரிகை, ஸ்பொஞ்ச் உதவியுடன் உடலில் வரையப்படும் ஓவியங்களுடன் யார் வேண்டுமானாலும் இந்தத் திருவிழாவில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் உலகப் புகழ் ஓவியர்கள் முதல் கத்துக்குட்டி ஓவியர்கள் வரை பலரும் கலந்துகொண்டார்கள்.
விசித்திரமான தோற்றங்கள், விதவிதமான ஒப்பனைகள், விநோதமான அலங்காரங்கள் என உடலில் வண்ணம் தீட்டிக்கொண்டு இவர்கள் அணிவகுத்து வந்தனர்.
உடல் ஓவியங்கள் மூலம் உலகின் முக்கியப் பிரச்சினைகளைப் பேசுவது, மனித உரிமைகளைப் பேசுவது, சமூகப் பிரச்சினைகளைப் பேசுவது, வெற்றிகளைக் கொண்டாடுவது, உடல் பாகங்களின் வழியே வண்ண அழகியலைப் படைப்பது என்று உலகம் முழுவதும் உடல் ஓவிய கலை இன்று பிரபலமாகி வருகிறது. அதன் வழியாகவே ஆஸ்திரியாவில் நடைபெற்றுவரும் உடல் ஓவியத் திருவிழாவும் ஓவியர்களின் அங்கமாகவே மாறிவிட்டது. அதனால், மருத்துவ விளைவுகளைப் பற்றியெல்லாம் இவர்கள் யாரும் கவலைப்படுவதில்லை.