தமிழகத்தில் 48 வயதுடைய விவசாயி ஒருவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தென்கனிக்கோட்டை கோடாங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த மாதப்பன்(48), அப்பகுதியை சேர்ந்த உளி வீரப்பா என்பவரின் மகள் முனியம்மாவை(14) திருமணம் செய்துள்ளார்.
மேலும் இந்த திருமணத்திற்காக மாதப்பன் முனியம்மாவின் தந்தைக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் 2-ஆவது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார், தற்போது 3-வது தடவையாக திருமணம் செய்துள்ளார்.
இதையறிந்த, கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல சங்க தலைவர் வின்சென்ட் கோடாங்கியூர் கிராமத்திற்கு ஒரு குழுவை அனுப்பி விசாரணை நடத்த போவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அந்த கிராம பகுதியில் குழந்தை திருமணம் சாதாரணமாக நடத்தப்படுகிறது, இதுவரை 9 குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு குழு அமைத்துள்ளோம்.
விசாரணை முடிந்த பின் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளரிடமும், காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.