வங்கதேசத்தில் உள்ள நான்கு வயது சிறுவன் 80 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றான்.
தெற்கு வங்கதேசத்தின் மகுரா பகுதியில் வசிக்கும் 26 வயதான ஹூசைன் மற்றும் 18 வயதான திப்தி கேதன் ஆகியோருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தைக்கு பயேஷித் ஷிக்தர் ஹூசைன் என்று பெயரிட்டுள்ளனர்.
குழந்தை பிறந்த போதே கைகள், கால் போன்றவற்றின் தோல் சுருங்கி முதுமைத் தோற்றத்துடன் இருந்துள்ளது. அதோடு குழந்தைக்கு இதய நோய், பார்வைக்குறைபாடு, காது கேளாமை உள்ளிட்ட குறைபாடுகளும் உள்ளன.
இதையடுத்து, பயேஷித்தை பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்று அவனது பெற்றோர் சிகிச்சை வழங்கியுள்ளனர்.
இதற்காக அவர்கள் தங்களது பூர்வீக நிலத்தை விற்றுப் பணம் பெற்றிருக்கின்றார்கள்.
ஆனாலும் சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகள் தொடர்பில் மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லையாம்.
இந்நிலையில், தற்போது அந்த சிறுவனை டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள்.
இங்கு ஷிக்தரின் முதுமை நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.