இரவு நேரத்தில் தொலைத்தூர பிரதேசமொன்றில் கழிவறைக் கடதாசிகளை தீ மூட்டியதன் மூலம் கிடைத்த வெளிச்சத்தின் உதவியுடன் விமானமொன்று தரையிறக்கப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ரோயல் பிளையிங் டொக்டர் சேர்விஸ் (Royal Flying Doctor Service) எனும் பறக்கும் மருத்துவ சேவை அமைப்பின் விமானமொன்றின் விமானிகளுக்கே இந்த அனுபவம் ஏற்பட்டது.
1928 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் மருத்துவ அமைப்பு இது. தமது குழுவினர் எதிர்நோக்கும் சவால்களை சுட்டிக்காட்டும் வகையில், கடந்த 31 ஆம் திகதி தமது விமானிகளுக்கு ஏற்பட்ட மேற்படி அனுபவம் குறித்து அவ்வமைப்பு சமூக வலைத் தளங்களில் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த இரவில், பண்ணையொன்றில் பணியாற்றும் பெண்ணொருவருக்கு நோய் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. எமது மருத்துவ குழுவினர் உடனடியாக விமானத்தின் மூலம் பறந்தனர்.
ஆனால், இருளான அப்பகுதியில் விமானத்தை இறக்குவதற்கு ஏற்ற பகுதியை அடையாளம் காண்பதற்கு விமானிகளால் முடியவில்லை.
அதையடுத்து ஒளியை ஏற்படுத்துவதற்கு என்ன வழி என தொலைபேசி மூலம் அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. தம்மிடம் கழிவறை கடதாசி சுருள்கள் இருப்பதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.
அக் கழிவறை கடதாசிகளை டீசலில் நனைத்து தீ மூட்டுமாறு அதிகாரிகள் ஆலோசனை கூறினர். அதன்படி கழிவறை கடதாசிகள் தீ மூட்டப்பட்டன.
30 மீற்றர் அகலமான பரப்பில் சுமார் அரை மணித்தியாலம் இவ்வாறு கழிவறை கடதாசிகள் தீ மூட்டப்பட்டன என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த வெளிச்சத்தின் உதவியுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி, நோயாளியான பெண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.