தென் கொரியாவைச் சேர்ந்த 908 பேர் தமது தலைகளை மொட்டையடித்துக் கொண்டதன் மூலம், தமது நகரில் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறை ஸ்தாபிக்கப்படுவதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சியோங்ஜூ எனும் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களே இவ்வாறு விநோதமான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்களாவர்.
வடகொரியாவின் ஏவுகணைத் தாக்குதலை முறியடிப்பதற்காக சியோங்ஜூ பிராந்தியத்தில் வட அமெரிக்காவின் அதி நவீன ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறை ஸ்தாபிக்கப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மேற்படி எதிர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் 908 பேர் தமது தலைகளை மொட்டையடித்துக் கொண்டனர் என ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் வலிமையான எதிர்ப்பு வெளிப்பாடாகும் என அவர் கூறினார். கடந்த ஜனவரி மாதம் தனது நான்காவது அணுவாயுத சோதனையை வடகொரியா நடத்தியது.
அதன்பின் செய்மதியொன்றை ஏவியதுடன் ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. இதனால், தென் கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பதற்றநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நவீன ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்குப் பொருத்தமான இடத்தை தான் ஆராய்ந்து வருவதாக தென் கொரிய ஜனாதிபதி பார்க் க்வென் ஹை அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, சியோங்ஜூ பிராந்தியத்தில் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை நிறுவ அங்குள்ள மக்கள் ஆட்சேபித்தால் வேறு இடம் கருத்திற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.