மத்திய பிரதேசத்தில் பெருமழையினால் பாதிக்கப்பட்ட கட்டிடம் ஒன்றின் இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுமியை தமது உயிரை துச்சமென நினைத்து கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் சில நாட்களாக பெரும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. அங்குள்ள பல கட்டிடங்களும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கட்டிடம் ஒன்றின் இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுமியின் பரிதாபக்குரல் அப்பகுதியில் கடந்து சென்ற 42 வயதான கால்பந்து பயிற்சியாளர் பப்லூ மார்ட்டின் என்பவருக்கு கேட்டுள்ளது.
இதனையடுத்து துரிதகதியில் செயல்பட்ட அவர் உடனடியாக அந்த கட்டிடத்தினுள் புகுந்து அந்த 12 வயது சிறுமி பிரபா என்பவரை காப்பாற்றியுள்ளார்.
ஆனால் அவரால் அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் போனது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்டு வெளியே எடுத்துள்ளனர்.
ஆனால் அவரது உயிரை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது. மேலும் அந்த கட்டிடத்தில் சிக்கிய இன்னொருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 4 பேர் காயமடைந்துள்ளனர்.
மழைக்கு முன்னரே அந்த கட்டிடத்தை காலி செய்யும்படி உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்ததால் அதில் தங்கியிருந்தவர் வெளியேறியுள்ளனர்.
ஆனால் அந்த கட்டிடத்தின் காவலாளியின் மகளை காப்பாற்றும் முயற்சியில் மாநில அளவில் பிரபலமான ஒரு கால்பந்து பயிற்சியாளர் உயிரை விட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழச்செய்துள்ளது.






