இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவரின் வயிற்றிலிருந்து 40 கத்திகளை சத்திரசிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
42 வயதான ஜேர்னைல் சிங் எனும் இந் நபர், உலோகத்தாலான மேற்படி 40 கத்திகளையும் விழுங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் இவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் நகரிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தான் கத்திகளை விழுங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக அவர் கூறினார். ஆனால், ஒன்றல்ல, இரண்டல்ல 40 கத்திகள் இவரின் வயிற்றில் இருப்பதை அறிந்து மருத்துவர்கள் பெரும் வியப்படைந்தனர்.
கத்திகளின் “சுவை” தனக்குப் பிடித்திருந்ததால் அவற்றை தான் விழுங்கியதாக ஜேர்னைல் சிங் கூறினார் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சத்திரசிகிச்சை மூலம் மேற்படி கத்திகள் அகற்றப்பட்டன. சுமார் 5 மணித்தியாலங்கள் இச் சத்திரசிகிச்சை நீடித்தது.
“எனது மருத்துவப் பணியில் இவ்வாறான ஒரு விடயத்தை நான் ஒரு போதும் கண்டதில்லை என இச் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வைத்திய சாலையில் தங்கியுள்ள ஜேர்னைல் சிங், இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப் படுகிறது.