திருச்சி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தையே மகளுக்கு போதை மாத்திரை கொடுத்து வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகரில் உள்ள திருவெறும்பூர் அருகே வின் நகரை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலாயுதம். இவரது மகள் வாசவி சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அஸ்வின் குமார் என்பவரை காதலித்துள்ளார்.
அஸ்வின் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வேலாயுதம் மகளை திருச்சி அழைத்து சென்று, போதை மாத்திரை கொடுத்து வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.
இது குறித்து திருவெறும்பூர் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மதன் தலைமையிலான பொலிசார் வாசவி வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது வாசவியை வேலாயுதம் மற்றும் அவரது குடும்பத்தினர் தனி அறையில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வாசவியிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை அடைத்து வைத்துள்ளதாகவும், நாள்தோறும் 12 மாத்திரைகள் வரை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உடனடியாக வாசவியை மீட்ட பொலிசார் அவரது விருப்பத்தின் பேரில் அவரை காதலர் அஸ்வினுடன் சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






