நாகப்பட்டினத்தில் நண்பன் ஒருவனுக்கு எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கழிப்பறை கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தை சேர்ந்த அகத்தியன் என்ற மாணவன் அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளார். இதனால் அவருடைய சக நண்பர்கள் அகத்தியனிடம் சென்று விசாரித்த போது, தன் காலில் இருந்த தோல் நோயை காட்டி வருந்தியுள்ளார்.
இதை தொடர்ந்து அடிக்கடி விஷக்காய்ச்சல் வருவதாக கூறியுள்ளார். இதற்கு தன் வீட்டில் கழிப்பறை இல்லாததும், திறந்த வெளியில் மலம் கழிப்பதும் தான் காரணம் என கூறி தன் நண்பர்களிடம் வருந்தியுள்ளார்.
இதை உணர்ந்த நண்பர்கள் தங்களால் முயன்ற அளவுக்கு பணம் சேர்த்தனர். இதை பற்றி பள்ளி ஆசிரியர் ஒருவரிடமும் தெரிவித்துள்ளனர்.
அவர் உதவியோடு கழிப்பறை கட்டுவதற்கான பேரணியை நடத்தினர். சக மாணவர்களிடமும் பணம் பெற்றனர்.
கழிப்பறை கட்டுவதற்கான பணம் கிடைத்துவிட்டதால் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கழிப்பறையை கட்டி நிறைவு செய்தனர். மாணவர்களின் செயல்பாடுகளை அறிந்த கல்வி அதிகாரிகள், அவர்களை நேரில் அழைத்து பாராட்டினர்.
நண்பனுக்காக பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து கழிப்பறை கட்டிய மாணவர்களின் செயல்பாடுகளை அக்கிராம மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து சென்றனர்.







