ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவி அடித்துக்கொலை!!

526

Love

கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவியை, உதயகுமார் என்ற மாணவர் வகுப்பறையில் வைத்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு சிவில் பாடம் படித்து வருகிறார் சோனாலி. இவர் வழக்கம்போல் இன்று வகுப்பறைக்கு சென்று அங்கு அமர்ந்துள்ளார். அப்போது திடீரென வகுப்பறைக்குள் புகுந்த உதயகுமார் என்ற மாணவன், கட்டையால் சோனாலியை தாக்கியுள்ளார்.

இதில், வலி தாங்க முடியாத சோனாலி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், அதன் பின்னர் மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சோனாலி உயிரிழந்தார். மாணவியை தாக்கிய உதயகுமார் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர் ஆவார். இந்த சந்தர்ப்பத்தில் தான் கல்லூரிக்குள் புகுந்த இவர் இந்த வெறிச்செயலை நிகழ்த்தியுள்ளார்.

சோனாலியை ஒரு தலையாக காதலித்து வந்த உதயகுமார், தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார், ஆனால் சோனாலி காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட உதயகுமார் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாணவனை கைது செய்துள்ள பொலிசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கல்லூரிக்கு 3 நாள் விடுமுறையை அறிவித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். கல்லூரியில் நிகழ்ந்த இந்த சம்பவம், மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.