வட்ஸ்அப் தகவலினால் திருமணமொன்று நிறுத்தப்பட்ட சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியினருகேயுள்ள சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 58). இவரது மகன் மகேஷ் (31). திருச்சியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், ஆரணி எஸ்.வி. நகரை சேர்ந்த மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 20 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர்.
இவர்களிருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் சேவூரிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமணத்தை நடத்தவிருந்தனர். இரு வீட்டாரும் திருமண வேலைகளில் மும்முரமாக செயற்பட்டு வந்தனர்.
இதற்காக முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முகூர்த்த நேரமும் நெருங்கியது. மணமேடையில் மகேஷ் அமர்ந்திருந்த நிலையில், அவருடைய செல்போனிற்கு ஆரணி தசராபேட்டை பகுதியைச் சேர்ந்த விநாயகம், என்பவர் ‘வட்ஸ்அப்பில் ஒரு குறுந்தகவலை அனுப்பியிருந்தார்.
மகேஷ் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த குறுஞ்செய்தியில், மணமகள் மீனாவும், விநாயகமும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் இருந்தன.
மேலும் விநாயம் கூறியதாவது, எனக்கும், உங்களுக்கு திருமணம் நடக்கவிருக்கும் பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பே திருமணம் நடந்து விட்டது.
அதன்போது நாங்களிருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் இவை. நான் திருமணம் செய்த பெண்ணை நீங்கள் எப்படி திருமணம் செய்ய முடியும் என அவர் கூறியிருந்தார்.
உடனே மகேஷ், அவரது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தார். இதையடுத்து மகேஷின் குடும்பத்தினர், மணமகளின் பெற்றோரிடம் உங்கள் மகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுபற்றி நீங்கள் ஏன் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை என கேட்டதற்கு பெண்ணின் பெற்றோர் பதில் எதுவும் கூறவில்லை என தெரிகிறது. இதைத் தொடர்ந்து மகேஷின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
இதுகுறித்து மணி தாலுகா பொலி ஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதில் ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து பெண் வீட்டார் மோசடி செய்துள்ளனர். முன்னெடுக்கப்பட்ட திருமண ஏற்பாடுகளுக்காக 5 இலட்சம் ரூபா செலவாகியுள்ளது.
குறித்த பணத்தை மணமகள் வீட்டாரிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என க் கூறியிருந்தனர். முறைப்பாட்டை பதிவு செய்த பொலிஸ் அதிகாரி சின்னராஜ், அது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்தநிலையில், வட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பி திருமணத்தைத் தடுத்து நிறுத்திய இளைஞர் விநாயகம் தலைமறைவாகியுள்ளார். பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.






