தன்னை காதலிக்க மறுத்த இளம் பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த நியூமேன் மகள் என்.பிரான்ஸினா (24). இவர் சண்முகாபுரத்தில் உள்ள ஒரு தனியார் மழலையர் பாடசாலையில் 3-ஆம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பிரான்ஸினாவை அதே பகுதியைச் சேர்ந்த கீகன் ஜோஸ் (26) என்ற இளைஞர் ஓராண்டுக்கும் மேலாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பலமுறை பிரான்ஸினாவிடம் காதலைச் சொல்லியும் அவர் கீகனை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார் கீகன்.
ஒருகட்டத்தில் கீகனின் தொல்லை தாங்காமல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் பிரான்ஸினா. அந்த முறைப்பாட்டின் பேரில் கீகனை வரவழைத்து பொலிஸார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
சிறிது காலம் தொந்தரவு கொடுக்காமல் இருந்திருக்கிறார் கீகன். இந்நிலையில்தான் பிரான்ஸினாவுக்கு வீட்டில் அவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது.
எதிர்வரும் 8ம் திகதி பிரான்ஸினாவுக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த கீகன் கடந்த ஒரு வாரமாகவே பிரான்ஸினா செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்திருக்கிறார்.
பிரான்ஸினா ஒவ்வொரு நாளும் அருகிலிருக்கும் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துவிட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் நேற்றும் அவர் தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். காலை 8.30 மணியளவில் தேவாலயத்துக்குள் இருந்த பிரான்ஸினாவை கீகன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் அவரது கழுத்து, தலை, முகம் ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்து மீட்கப்பட்ட அவர் தூத்துக்குடி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அடுத்த சில மணி நேரங்களில் அவரது உயிர் பிரிந்தது.
தேவாலயத்தில் பிரான்ஸினாவை வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற கீகன் அவரது சகோதரன் வீட்டுக்குச் சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.






