காதலனை திருமணம் செய்த மகள் : ஆணவக் கொலை செய்ய பெற்றோர் முடிவு?

1171

Lovers

திருச்சி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆணவக் கொலை செய்ய ஊர் கூட்டத்தில் முடிவு செய்து கொலை செய்ய போவதாக மிரட்டல் விட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் பூலாங்குலத்துப்பட்டி செட்டியூரணிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகள் உமா(23).

இவர் நேற்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் குறிப்பிட்டிருந்ததாவது, நான் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுகலை பட்டயபடிப்பு (M.com) முதலாமாண்டு படித்து வருகிறேன்.

நானும் மணிகண்டம் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறோம்.

இந்நிலையில், எனது காதலர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எங்கள் வீட்டில் எனது காதலை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதனால் கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி நானும் எனது காதலரும் வீட்டைவிட்டு வெளியேறி கோவை மருதமலை கோயிலில் திருமணம் செய்து கொண்டோம்.

இதையறிந்த எனது பெற்றோர் ஊர் கூட்டம் நடத்தி எங்களை கொலை செய்து விட ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், எங்களை ஆணவக் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுக்கின்றனர்.

எனவே எனது ஊர் காரர்களிடமிருந்தும், எனது பெற்றோரிடமிருந்தும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.