ரியோ டி ஜெனெய்ரோவில் நடந்தேறிய ஒலிம்பிக் விளையாட்டு விழாவைத் தொடர்ந்து இம்மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பராலிம்பிக் விளயைாட்டு விழா வில் இலங்கையைச் சேர்ந்த 9 போட்டியாளர்கள் பங்குபற்ற வுள்ளனர்.
ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய 9 இலங்கையர்களில் ஒருவரைத் தவிர்ந்த மற்றைய எண்மரினதும் பெறுபேறுகள் தரம் குன்றிக் காணப்பட்ட நிலையில் பராலிம்பிக் போட்டியாளர்கள் சாதிக்கும் முனைப்புடனும் நம்பிக்கையுடனும் ரியோ நோக்கி நாளை புறப்படுகின்றனர்.
இலங்கை அணியில் எட்டு ஆண் போட்டியாளர்களும் ஒரு பெண் போட்டியாளரும் இடம்பெறுகின்றனர். பராலிம்பிக் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பாக்கியம் அனில் பிரசன்ன ஜயலத்துக்கு கிடைத்துள்ளது.
இவர் ரீ 42 பிரிவில் 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் நீளம் பாய்தலிலும் பங்குபற்றவுள்ளார். காமினி ஏக்கநாயக்க, தினேஷ் பிரியன்த ஹேரத் ஆகிய இருவரும் எவ் 44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியிலும் சம் பத் ஹெட்டிஆராச்சி எவ் 46 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியிலும் பங்குபற்றுகின்றனர்.
அஜித் ஹெட்டிஆராச்சி ரி 44 பிரிவு 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் ஆகிய ஓட்டப் போட்டிகளிலும் இந்திக்க சூலதாச ரி 42 பிரிவு 100 மீற்றர், 200 மீற்றர் ஆகிய ஓட்டப் போட்டிகளிலும் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தவுள்ளனர்.
அணியில் இடம்பெறும் ஒரே ஒரு வீராங்கனையான அமரா இந்துமதி ரி 47 பிரிவு 200 மீற்றர், 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுகின்றார். இவர்களைவிட சக்கர இருக்கை டென்னிஸ் போட்டியில் உபாலி ராஜகருணவும் வில்லாளர் போட்டியில் சம்பத் பண்டாரவும் பங்கேற்கின்றனர்.
ரியோ பராலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் இலங்கையர்கள் பதக்கங்கள் வென்று வருவார்கள் என நம்புவதாகக் குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களை வாழ்த்தினார்.
இலங்கை பராலிம்பிக் அணியினருக்கு டயலொக் ஆசியாட்டா நிறுவனம் பூரண அனுசரணை வழங்குகின்றது.