திருமணத்துக்காக கொள்ளையடித்த புதுமாப்பிள்ளை மற்றும் அவரது நண்பர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பாரிமுனை பகுதியில் கடந்த வாரம் ஏ.ரீ.எம். நிலையங்களுக்கு பணத்தை நிரப்ப சென்ற வேன், பணத்துடன் கடத்தப்பட்டது. அதிரடியாக பூக்கடை துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான பொலிஸ் குழு களமிறங்கி வேன் சாரதி ராஜேஷ், அவரது நண்பர் லிங்கம் ஆகியோரை கைது செய்தது.
அயனாவரத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் ஏ.ரீ.எம் நிலையங்களுக்கு பணம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் பாரிமுனையில் உள்ள ஏ.ரீ.எம் நிலையங்களுக்கு கடந்த வாரம் கொண்டு வரப்பட்டது. 50 இலட்சத்துக்கும் அதிகமான பணம் வேனில் இருந்துள்ளது.
குறுகிய சந்தில் இருந்த ஏ.ரீ.எம் நிலையத்துக்கு வேன் செல்ல முடியாததால் வீதியில் வேனை நிறுத்தினர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் பணம் ஏ.ரீ.எம் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சமயத்தில் பெரம்பூரை சேர்ந்த சாரதி ராஜேஷ் மட்டும் வேனில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. வேனை விட்டு இறங்கி ராஜேஷ் பேசியுள்ளார்.
இந்த சமயத்தில் மின்னல் வேகத்தில் வேனை எடுத்த மர்ம நபர்கள், அங்கிருந்து சென்றுள்ளனர்.
ராஜேஷும் திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து பாதுகாவலர்கள் அங்கு விரைந்துள்ளனர். இதுகுறித்து வடக்கு கடற்கரை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக வேன் இலக்கம் மற்றும் அடையாளம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் ராயபுரம் பகுதியில் வேன் மட்டும் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. வேனை பறிமுதல் செய்த பொலிஸார், தொடர்ந்து பணம் கொண்டு சென்ற நிறுவன ஊழியர்களிடம் விசாரணை செய்தனர்.
அப்போது சாரதி ராஜேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தனியாக பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளையும் பொலிஸார் ஆய்வு செய்தனர்.
அப்போதுதான் கொள்ளையடிக்க திட்டம் திட்டியதே ராஜேஷ் என்பது பொலிஸாருக்கு தெரியவந்தது. உடனடியாக ராஜேஷை பொலிஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து வேனைக் கடத்திய ராஜேஷின் நண்பரான வியாசர்பாடியை சேர்ந்த லிங்கத்தையும் பொலிஸார் கைது செய்து இருவரிடமிருந்து 26 இலட்சம் ரூபாயை மீட்டனர்.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, “கைதான ராஜேஷ், பணம் நிரப்பும் நிறுவனத்தில் ஏற்கனவே வேலைபார்த்தவர். இப்போது சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார்.
பணம் சப்ளை செய்யும் நிறுவனத்தில் சாரதி இல்லாத சமயத்தில் அங்கு பணிக்கு செல்வார் ராஜேஷ். அப்படி தான் நேற்றும் வேலைக்கு சென்றுள்ளார். ராஜேஷின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம். 8ஆம் தரம் வரை படித்த அவருக்கு வேன் வாங்கியதில் 4 இலட்சம் ரூபா கடன் உள்ளது.
மேலும், நேற்று முன்தினம் சிறுனியத்தில் அவருக்கு திருமணம் நடக்கவிருந்தது. திருமணத்துக்கு தேவையான பணமும் கையில் இல்லை. இந்த சமயத்தில் இலட்சக்கணக்கான பணத்தை பார்த்தவுடன், லிங்கத்தின் மூலம் அதை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். திருமணம் நடக்க இருந்த புதுமாப்பிள்ளை ராஜேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.






