கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் தருணத்தில் என் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன் என முன்னால் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலின் போது பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. தலைவர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் மற்றும் முன்னாள் எம்.பி அழகிரி ஆகியோர் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு நேற்று பண்ருட்டியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன், முன்னாள் எம்.பி அழகிரி, நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.
இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் கூறியதாவது, கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்காக நான் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தினை மேற்கொண்டேன். ஆனால் பொலிசார் அறிவித்த இடத்தை விட்டு வேறு இடத்தில் பிரச்சாரம் செய்ததாக என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். இந்த வழக்கினை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.






