கடலுக்குச் சென்ற பல மீனவர்கள் மாயம்: இதுவரை மூன்று சடலம் மீட்பு

403

பலபிட்டி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 20 படகுகளில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பலபிட்டி மற்றும் பெந்தர கடற்பரப்பில் இவ்வாறு மீனவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு மீன்பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை வீசிய கடும் காற்றில் இவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, பேருவளை கடற்பரப்பில் மற்றுமொரு மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் மூன்று கடற்படை படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடும் காற்று காரணமாக பல மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இதுவரை மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.