கர்நாடகாவில் தமிழக குடும்பத்தினரை உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சி செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த நவாஸ்பாஷா என்பவர் கடந்த 11 ஆம் திகதி,தனது தம்பி மனைவி பிரசவத்திற்காக கர்நாடகாவின் மாண்டியாவிற்கு சென்றுள்ளார்.
மறுநாள் நவாஸ்பாஷா உள்ளிட்டோர் காரில் தமிழகம் திரும்பி கொண்டிருந்தனர். மாண்டியாவின் புறநகர் பகுதியில் உள்ள நந்தினி பால் டிப்போ அருகில் வந்தபோது, கலவர கும்பல் காரில் இருந்தவர்களை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளனர்.
இதில் பதறியடித்து வெளியேறிய நவாஸ்பாஷா மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், காட்டுக்குள் தப்பியோடி உயிர் பிழைத்தனர்.
பின்னர் பல்வேறு சோதனைகளுக்கு இடையில் ரயில் மூலம் தப்பித்து அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
இந்நிலையில் தர்மபுரி ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் நவாஸ்பாஷா புகார் மனு அளித்தார். அதில் தாங்கள் இழந்த கார் மற்றும் உடமைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டி மனு அளித்துள்ளார்.






