காவிரி நீர் திறப்பு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் ஏற்பட்ட வன்முறையைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதா? என்று இரு மாநில அரசுகளுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) கண்டனம் தெரிவித்தது.
காவிரி விவகாரத்தால் ஏற்பட்ட வன்முறை குறித்து ஆணையத்தின் உறுப்பினரும் நீதிபதியுமான டி.முருகேசன் பரிந்துரையின் பேரில், வன்முறையின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மனித உரிமை மீறல்களாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் கருதியது.
இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஆணையம் மேற்கொண்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆணையம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெங்களூருவில் காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மிகவும் தீவிரமாக அரங்கேறிய வன்முறையில் அரசு, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சிவில், காவல் துறைகள் சரியான முறையில் செயல்படவில்லை. குண்டர்களின் சட்டவிரோதமான வன்முறைச் செயல்களை முன்கூட்டியே அனுமானித்து அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.
இரு மாநிலங்களிடையிலான நீர்ப் பங்கீடு விவகாரத்தால் வன்முறை மிகவும் தீவிரம் அடைந்த பிறகுதான் அரசு, காவல் அமைப்புகள் விழித்துக் கொண்டுள்ளன. வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு சில இடங்களில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மருத்துவமனைகளுக்கும், பிற அவசரத் தேவைகளுக்கும் நகருக்குள் பொதுமக்கள் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு நடமாட முடியாமல் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.
மக்களின் வாழ்க்கை, பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் அரசுப் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்கள் பணிகளை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டியுள்ளனர். இதை மிகவும் தீவிர கவனத்துடன் ஆணையம் கருத்தில் கொண்டு கண்டனம் தெரிவிக்கிறது.
இரு மாநிலங்களிலும் எவ்வளவு பேர் வன்முறையால் காயம் அடைந்தனர்? அரசு மற்றும் தனியார் சொத்துகள் எவ்வளவு சேதம் அடைந்தன? காவல் துறை, அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள், காவல் துறைத் தலைமை இயக்குநர்கள் அறிக்கை அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







