தாயின் சடலத்தை எரிக்க விறகின்றி தவித்த மகள்கள்: வீட்டுக் கூரையை பிரித்து அதில் எரித்த சோகம்!!

274

1

ஒடிசாவின் கலாகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மஜ்கி, என்பவர் தனது மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூக்கிச் சென்ற அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத நிலையில், இதே மாவட்டத்தில் மற்றொரு வேதனைச் சம்பவம் நடந்துள்ளது.

கலாகண்டி மாவட்டத்தில் உள்ள தோக்ரிபாடா கிராமத்தைச் சேர்ந்தவர் கனாக் சத்பதி, 75 வயது நிரம்பியவர். இவருக்கு நான்கு மகள்கள். கனாக் சத்பதியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவரது நான்கு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இதில் இருவரின் கணவர்கள் இறந்து விட்டனர். இருவரை கணவர்கள் கை விட்டு விட்டனர். இதனால் மகள்கள் தங்கள் குழந்தைகளுடன் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பிச்சையெடுத்து அரைவயிற்றுக் கஞ்சி குடித்தனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த கனாக் சத்பதி வெள்ளிக்கிழமையன்று இறந்து விட்டார்.

தாயார் இறந்ததும் மகள்கள் அக்கம் பக்கத்தினரிடம் தாயாரிடன் உடல் அடக்கத்துக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாயின் உடலை மாயானத்துக்கு எடுத்துச் சென்று எரிக்க உதவுமாறு கிராம மக்களிடம் அழுதபடி கெஞ்சியுள்ளனர்.

ஆனால் இவர்களின் அழுகை யார் மனதையும் அசைத்து விடவில்லை. எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து சனிக்கிழமை காலையில் கானத் சத்பதியின் மகள்கள் பங்காஜினி தாஸ் (வயது 50 ) ராதா ( வயது 45) பிரதீமா (வயது 39) சஞ்சுக்கா ( வயது 40) ஆகியோர் தாயாரின் சடலத்தை ஒரு கட்டிலில் வைத்து தூக்கிக் கொண்டு மயானத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு நான்கு பேரும் சடலத்தை தூக்கி சென்றனர். சுடுகாட்டில் தாயாரின் சடலத்தை எரிப்பதற்கு விறகு கட்டைகள் வாங்கவும் அவர்களிடம் பணம் இல்லை.

அதனால், யாரும் விறகுக்கட்டைகள் கொடுக்கவில்லை. இதனால் மேலும் பரிதவித்து போன அந்த பெண்கள், தங்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து அதில் இருந்து கிடைத்த விறகுகளை வைத்து தாயாரின் சடலத்தை எரித்திருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தை அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். ஒடிசாவின் பெரும்பாலான கிராமங்களில் மக்களிடையே கடுமையான மூடநம்பிக்கை நிலவுகிறது.

கணவன்மார்களால் கைவிட்டவர்களை ஒதுக்கி வைப்பது, கணவர்களை இழந்தவர்களை ஒதுக்கி வைப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில், மேற்கு ஒடிசாவில் பர்கார் மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது மனைவியை கைவிட்டு விட்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓடி விட்டார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்த பெண் இறந்து போனார். அந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய, கிராமத்தினர் யாம் உதவிக்கு வரவில்லை. கடைசியில் அந்த பெண்ணின் இரு மகள்களும் சேர்ந்து தாயாரின் சடலத்தை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று எரியூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-விகடன்-

2 3