விடை தெரியாமலேயே முடிந்த போன ராம்குமார் : சொந்த ஊரில் உடல் அடக்கம்!!(அதிர்ச்சிப் படங்கள்)

541

1

சுவாதி படுகொலை வழக்கில் கைதாகி மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று சொந்த ஊரான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஏன் கைது செய்யப்பட்டார், எப்படி இறந்தார் என்பது கடைசி வரை மர்மமாகவே நீடித்த நிலையில் ராம்குமாரின் அத்தியாயம் முடிந்து போய் விட்டது. உடல் அடக்கம் இன்று நடைபெற்றதையொட்டி மீனாட்சிபுரத்தில் பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

எங்கு பார்த்தாலும் பொலிஸ் தலையாகவே காணப்பட்டது. ராம்குமார் உடலைப் பார்த்து ஊர் மக்கள் கதறி அழுதனர். மக்களின் அஞ்சலிக்குப் பின்னர் ராம்குமாரின் உடல் அடக்கம் நடைபெற்றது.

செப்டம்பர் 18ம் திகதி மரணம்

பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் விசாரணை கைதியாக சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ராம்குமார். அவர் கடந்த 18ம் திகதி அன்று திடீரென்று மின்சார வயர்களை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

ஆனால் ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது. சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. ராம்குமாரின் தந்தையும் இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இதையடுத்து ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரும் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து சட்டப் போராட்டம் நடத்தினார் ராம்குமாரின் தந்தை பரமசிவம்.

ஆனால் எந்த நீதிமன்றமும் அவரது கோரிக்கையை செவி மடுக்கவில்லை. பிரேதப் பரிசோதனை இறுதியில் அரசு மருத்துவர்கள் 4 பேர் குழுவுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர் கே குப்தாவும் இணணந்து ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நேற்று நடத்தினர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ராம்குமாரின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு தலைவர்கள் ராம்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து உடல் சொந்த ஊருக்கு அம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து ராம்குமாரின் உடல் இன்று காலை மீனாட்சிபுரம் வந்து சேர்ந்தது. அதைத் தொடர்ந்து ஊர் மக்கள் அஞ்சலிக்குப் பின்னர் உடல் மாயணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

மீனாட்சிபுரம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதால் ஊரே பரபரப்பாக காணப்பட்டது.

ராம்குமார் மரணமடைந்து 15 நாட்களாகி விட்டது. ஆனால் அவரது பிரேதப் பரிசோதனை தொடர்பாக அரசு தரப்பில் பிடிவாதம் காட்டி வந்ததால் சட்டப் போராட்டம் நீண்டு பெரும் தாமதத்திற்குப் பின்னர் நேற்றுதான் பிரேதப் பரிசோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2 3 4 5