சுயமாக தன்னை சமநிலைப் படுத்தக்கூடிய மோட் டார் சைக்கிளை பி.எம்.டபிள்யூ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் ட்ட மோனிக்கா நகரில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மோட்டார் சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்டது.
ஜேர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ வாகனத் தயாரிப்பு நிறுவனமானது தனது 100 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு அம்சமாக இந்த மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Motorrad Vision Next 100 எனும் இந்த மோட்டார் சைக்கிளானது மிகப் பாதுகாப்பானது எனவும் இதை செலுத்தும்போது தலைக்கவனம் அணியத் தேவையில்லை எனவும் இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் சுயமாக சமநிலைப்படுத்தப்படக் கூடியவாறு இதன் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கும்போது கூட இது சரிய மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த சுய சமநிலைப்படுத்தல் பொறிமுறை மூலம் இம் மோட்டார் சைக்கிளை செலுத்துபவர்கள் எந்த நேரத்திலும் பாதுகாக்கப்படுவர்.
இதனால் இத் தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தில் தலைக்கவசம் அணியாமலும் மோட்டார் சைக்கிளோட்டிகள் பயணம் செய்யக்கூடியதாக இருக்கும்” என பி.எம்.டபிள்யூ நிறுவன மோட்டார் சைக்கிள் பிரிவின் வடிவமைப்புப் பணிப்பாளர் எட்கார் ஹென்ரிச் தெரிவித்துள்ளார்.
இம் மோட்டார் சைக்கிள் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வாயு எதனையும் வெளியிடமாட்டாது.
எவ்வாறெனினும் இது ஓட்டுநர் இன்றி சுயமாக செலுத்தப்படக்கூடிய மோட்டார் சைக்கிள் அல்ல எனவும் எட்கார் ஹென்ரிச் தெரிவித் துள்ளார்.