கணவன் மீது மனைவி கொடுத்த முறைப்பாட்டை விசாரணை செய்ய சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் காதல்வயப்பட்டு, குறித்த நபரையே இரண்டாவதாக திருமணம் செய்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தெற்கு பரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(40). இவரது மனைவி லதா(36). இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமி மலையிலுள்ள கோயி லில் கடந்த 28ஆம் திகதி, கணவரை பிரிந்து வாழும் ராதிகா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
ராதிகா, தெற்குபரணம் அடுத்துள்ள இரும்புலி குறிச்சி பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தராக பணி புரிந்து வருகிறார். இதுகுறித்து செல்வகுமார் மனைவி லதா அளித்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் செல்வகுமாரை கைது செய்தனர்.
இதையறிந்த பெண் பொலிஸ் ராதிகா, தலைமறைவாகியுள்ளார். அவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, செல்வகுமாரும், லதாவும் உறவினர்கள்.
இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2000இல் திருமணம் செய்து கொண்டனர். செல்வகுமார் சில ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூருக்கு சாரதி வேலைக்காக சென்றார்.
வருடத்திற்கு 2 அல்லது 3 முறை ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு வந்து சென்றபோது, தெற்கு பரணம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 5 பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கணவனின் காதல் லீலைகளை அறிந்த லதா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் சிங்கப்பூர் சென்று சில மாதங்களில் பணம் அனுப்புவதை நிறுத்தியுள்ளார்.
மனைவி லதாவை தினமும் தொலைபேசியில் திட்டியுள்ளார். இந் நிலையில் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி கடந்த ஜூலை மாதம் இரும் புலிகுறிச்சி பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அங்கு பணியில் இருந்த பெண் பொலிஸ் ராதிகா கூறியதும் கணவரின் தொலைபேசி இலக்கத்தையும் லதா அவரிடம் கொடுத்துள்ளார்.
செல்வகுமாருக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு மணிக்கணக்காக செல்வகுமாரிடம் பேசியதில் இருவருக்கு காதல் மலர்ந்துள்ளது. பின்னர் தானும் கணவரை பிரிந்து வாழ்வதாக கூறியதால் இரு வரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.
இதற்கிடையில் பெற்றோருடன் வசித்து வந்த பெண் பொலிஸ் ராதிகா, இரும்பு லிகுறிச்சி பொலிஸ் நிலையத்துக்கு பணிக்கு செல்லும்போது வழியில் உள்ள லதா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதற்கிடையில், செல்வகுமாரும், ராதிகாவும் வாட்ஸ்அப் மூலம் பேசியதும், ஐ.பி.எஸ். அதிகாரி போல் மார்பிங் செய்த புகைப்படமும் ஊருக்குள் பரவியது. இதையறிந்த லதா, கடந்த 2 மாதத்திற்கு முன் பெண் பொலிஸ் ராதிகாவை சந்தித்து, கணவரை என்னிடம் இருந்து பிரித்து விடாதே என கதறியுள்ளார்.
செல்வகுமார், சிங்கப்பூரிலிருந்து கடந்த 24ஆம் திகதி ஊருக்குச் சென்றுள்ளார். 28ஆம் திகதி சுவாமிமலையில் ராதிகாவை இரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் திருமண கோலத்தில் செல்போனில் எடுத்துக்கொண்ட படத்தை பார்த்த லதா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் பொலிஸில் புகார் அளித்தார்.
அதன்பின்னர் பொலிஸார் செல்வகுமாரை கைது செய்தனர். இதனிடையே, தனது தந்தை குறித்து ஊருக்குள் தவறாக பேசுவதை அறிந்த செல்வகுமாரின் இரண்டாவது மகள், பெண் பொலிஸ் ராதிகாவை செல்போனில் தொடர்பு கொண்டு எங்க அப்பாவை எங்களிடமிருந்து பிரித்து விடாதீர்கள், அவ்வாறு பிரித்தால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம். எங்கள் சாவிற்கு நீங்கள் தான் காரணம் என எழுதி வைத்து இறப்போம் என கூறி கதறி அழுதுள்ளார்.






