பிச்சைக்காரர் ஒருவர் இறந்த தன் மனைவியின் சடலத்தை ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப் பணமில்லாததால் 60 கிலோ மீட்டர் தள்ளுவண்டியில் தள்ளிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள தெலுங்கனா மாநிலத்தில் ராமுலு என்ற முதியவர் மனைவி கவிதாவுடன் வசித்து வந்தார். தொழு நோயாளிகளான இவர்கள் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பிச்சையெடுத்துக் கொண்டிருந்தபோது கவிதா திடீரென உயிரிழந்துள்ளார்.
தனது மனைவியின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல விரும்பிய ராமுலு அதற்காக அங்குள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அணுகியுள்ளார்.
அவர்கள் 5 ஆயிரம் ரூபாய் கேட்ட நிலையில் அந்தத் தொகை தன்னிடம் இல்லாததால் மனைவியின் சடலத்தை ஒரு தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.
60 கிலோ மீட்டர் வரை தள்ளு வண்டியை தள்ளிய அவரால் அதற்கு மேல் தள்ள முடியவில்லை. செய்வதறியாது திகைத்த ராமுலு ரோட்டிலேயே அழத்தொடங்கினார்.
அங்கு அவரது நிலைமையைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, பணம் வசூலித்து அம்புலன்ஸ் மூலம் அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.